மாசிக்காய்- எண்ணற்ற மருத்துவ குணங்கள்

மாசிக்காய் மற்ற மரங்களின் காயைப் போல்,பூவிலிருந்து காயாகாது. இந்த மரத்தின் கிளைகளை ஒரு வித பூச்சிகள், துளையிடும் போது,
கிளையிலிருந்து பால் வடிந்து அது உறைந்து திரண்டு கெட்டிப்படும். இதுவே மாசிக்காயாகும்.
இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், அற்புதமான மருந்து. மாசிக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் சென்ற பின் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
மாசிக்காயை பொடி செய்து, அதனை சிறிதளவு தினம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும், அதிக ரத்தப் போக்கு கட்டுப்படும்.
மாசிக்காயை பொடித்து, 50 கிராம் எடுத்து, 800மில்லி., நீருடன் கலந்து, 10 நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி அதனை, 30 மில்லி., முதல் 60 மில்லி. வீதம் அருந்திவந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நாட்பட்ட இருமல், பெருங்கழிச்சல் முதலியவை குணமாகும்.
பொதுவாக குழந்தைகளுக்கு, உரைத்துக் கொடுக்கப்படும், உரை மருந்து வகைகளில் மாசிக்காயும் ஒன்றாகும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, பச்சை பச்சையாக பேதியாகும்.
இதற்கு புது மண்சட்டியை வாங்கி வந்து கவிழ்த்துப் போட்டு, அச்சட்டியின் மேல் மாசிக்காயை தாய்ப்பால் விட்டு இழைத்து
குழந்தையின் நாவில் தடவி வந்தால் பேதி நிற்கும். மாசிக்காய் சிறந்த துவர்ப்பியாகவும், ரத்தப் போக்கை நிறுத்துவதற்கும் பயன்படுகிறது.
நாள்பட்ட மேக நோய்களுக்கு மாசிக்காயை குடிநீரிலிட்டு, 30மில்லி., முதல் 60மில்லிதம் வீதம் அருந்தி வந்தால்,பலன் கிடைக்கும்.
தொண்டை அழற்சி நோய் உடையவர்கள் இதன் குடிநீருடன், 3 மில்லி கிராம் படிகாரமும், தேவையான அளவு தேனும் கலந்து
வாய் கொப்பளித்து வந்தால் குணம் தெரியும்.
மாசிக்காயையோ, மாசிக்காய் மரப்பட்டையையோ நீரில் ஊறவைத்து, அந்த குடிநீரை வாய் கொப்பளிக்கலாம்
அல்லது கஷாயம் வைத்தும் பயன்படுத்தலாம். 30 & 60 மில்லி., வரை அதையே உள்ளுக்கும் அருந்திவரலாம்.
காரம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது நம்மில் பலருக்கும் வாய்ப்புண் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள் அரை டேபிள் ஸ்பூன் மாசிக்காய் பொடியை வெந்நீரில் கலந்து வாய்கொப்பளித்து வந்தால்
வாய் துர்நாற்றம் மற்றும் வாய்ப்புண் சரியாகும். மேலும் ஈறுகள் பலம் பெறுவதற்கும் ஈறுகளில் கசியும் ரத்தத்தை சரி செய்யவும்,
பற்சொத்தையை சரி செய்யவும் உதவியாக இருக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக உதிர போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் ஏற்படும். அதனை சரி செய்ய தினமும் மாசிக்காய் எடுத்து கொள்வது நல்லது. அதிக ரத்தப்போக்கை நிறுத்த, மாசிக்காயை தேனில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரலாம். மேலும் இது கருப்பை வலுப்பெறுவதற்கும் உதவியாக இருக்கும்.
பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், பேதி, வயிறு உப்புதல் போன்றவற்றை சரி செய்ய பால் கொடுக்கும் பெண்கள் மாசிக்காயை பொடியாக செய்து வெந்நீர் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு வயிற்று பொருமல், செரிமான கோளாறுகள் போன்றவற்றை சரி செய்து குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவியாக இருக்கும்.
சொறி சிரங்கு, படை, தேமல் உள்ளவர்கள் மாசிக்காய் பொடியை நீரில் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து அதனை தொற்று உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
மூல நோயால் ஒரு சிலருக்கு கட்டிகள், காயங்கள், புண்கள் ஏற்படும். அதனை சரி செய்யவும் மாசிக்காய் பொடியை நீரில் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து புண் உள்ள இடத்தில் தடவி வரலாம்.
நம்முடைய உணவு முறை காரணமாக ஒரு சிலருக்கு வயிற்று போக்கு ஏற்படலாம், அதனை சரி செய்ய டேபிள் ஸ்பூன் மாசிக்காய் பொடியை, தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
குளிர்காலத்தில் அல்லது மழைக்காலத்தில் இருமல், ஜலதோஷம், தொண்டை வலி, தொண்டை கட்டு போன்றவை ஏற்படும். தீராத இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் கற்பூரவள்ளி இலைச்சாறுடன், மாசிக்காய் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
ஒரு சிலருக்கு மனதில் கவலை மற்றும் பயம் இருந்தால் அதிக படபடப்பு ஏற்படும். படபடப்பு நீங்குவதற்கு மாசிக்காய் பொடியை பாலில் கலந்து நாக்கில் தடவி வரலாம்.
கோடை காலத்தில் அதிக உஷ்ணம் காரணமாக முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்து விடும். ஒரு சிலருக்கு எண்ணெய் சருமம் அல்லது ஜீன் காரணமாக சருமத்தில் பருக்கள் இருக்கும்.
முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்க இரவு நேரத்தில் முகத்தில் அரை டேபிள் ஸ்பூன் ஜாதிக்காய் பொடி, அரை டேபிள் ஸ்பூன் மாசிக்காய் பொடியை நீரில் கலந்து முகத்தில் தடவி கொள்ளவும். பின் அதை காலையில் கழுவி விடலாம். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
தகவல்: காசி விஸ்வநாதன், திருநெல்வேலி
