அரசு பள்ளி மாணவிகள் 1000 பேர் நூலக உறுப்பினராக இணைந்தனர் ; செல்போன் பயன்பாட்டை குறைத்து நூலக புத்தகத்தை வாசிக்க உறுதி

நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ம் தேதி இந்திய நூலக தந்தை எஸ்.ஆர். அரங்கநாதனின் பிறந்த நாள் தேசிய நூலகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் தேசிய நூலகர் தினம் கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி அரசு கிளை நூலகத்தில் நூலக உறுப்பினராக 1000 மாணவிகள் இணைத்துக்கொண்டனர். அனைவருக்கும் நூலக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. 1000 நூலக உறுப்பினருக்கான கட்டணத் தொகை ரூ.30 ஆயிரத்தை சுவிட்சர்லாந்து சங்கமம் தொண்டு நிறுவனம் நூலகத்துறைக்கு வழங்கியது. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை உஷா ஷோஸ்பின் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ஆசிரியை கெங்கம்மாள் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளியின் முன்னாள் மாணவியும் டாக்டருமான கமலா மாரியம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் கண்ணன்,சீனிவாசன் உள்பட ஆசிரியர்கள்,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அறிவியல் ஆசிரியர் பிரவின் நன்றி கூறினார்.
செல்போன் பயன்பாட்டை குறைத்து பள்ளி பாட புத்தகத்தோடு நூலக புத்தகத்தையும் வாசித்து பொது அறிவை வளர்த்து விரும்பும் துறைகளில் சாதனை புரியவும்,வாசிப்பு பழக்கம் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
