கயத்தாறு அருகே துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமத்தில் துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் காற்றாலைகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த துணை மின்நிலையத்தில் உள்ளடிரான்ஸ்பார்மர் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று அதிகம் வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதோடு தீ அருகே இருந்த மின்மாற்றிகளுக்கும் பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கங்கைகொண்டான், பாளையங்கோட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 7 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு பணிகள் காலை 6 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணியை கடந்தும் தொடர்ந்து நடைபெற்றது.

ஆயில் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் இருக்க ஜேசிபி உதவியுடன் மணலை கொட்டி ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தீ விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
