இளையரசனேந்தல் சாலையில் வடிகால் அமைக்கும் பணி; உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை

கோவில்பட்டி நகரில் மிக முக்கியமான சாலை இளையரசனேந்தல் சாலை ஆகும். நகரில் இருந்து பைபாஸ் செல்வதற்கும், பைபாசில் இருந்து நகருக்கும் வருவதற்கும் இந்த சாலையை தான் பயனப்டுத்துகிறார்கள். மேலும் புதிய பஸ் நிலையம் செல்வதற்கும், அப்பனேரி, இளையரசனேந்தல்,ராஜபாளையம் செல்வததற்கும் இந்த சாலை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சாலையில் தான் மக்களை துன்புறுத்தும் ரெயில்வே சுரங்க பாலம் இருக்கிறது. மேலும் மின்சார வாரிய அலுவலகம் இருக்கிறது. பர்னிச்சர் கடைகள், லாரி செட், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், தீப்பெட்டி ஆலைகள் , அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது
அதிக அளவில் வாகன போக்குவரத்து உள்ள சாலையாக இருந்த போதிலும் தெரு விளக்குகள் மிகவும் குறைவாக இருக்கிறது. இரவு நேரங்களில் இந்த சாலை கடைகளில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் மின்னும். கடைகள் மூடியபிறகு இருள் சூழ்ந்து கொள்ளும்,.
அகலமான சாலையாக இருந்த போதிலும் பாதி அளவுக்கு மணல் குவிந்து கிடக்கிறது. ஆங்காங்கே குப்பை கழிவுகள் காண முடியும்.

இந்த சாலையின் ஒரு பகுதியில் சாக்கடை கால்வாய் இருக்கிறது. அதில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன, மழைக்காலம் வரும்போது சுத்தம் செய்யும் பணி நடக்கும். கனமழை பெய்யும்போது கால்வாய் நிரம்பி சாலையில் தண்ணீர் தேங்கி விடும். இந்த நிலை தொடர்ந்து வந்த நிலையில் தற்போது வடிகால் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கால்வாயை ஆழப்படுத்தி சிமெண்டு கான்கிரீட் போட்டு வடிகால் வசதி செய்யப்பட்டு வருகிறது. பகுதி வாரியாக பிரித்து இந்த வேலை நடக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு கால்வாய் தெரியாத அளவுக்கு சிமெண்டு மூடி மூலம் மூடப்பட்டு விடும்.

எனினும் தற்போது இந்த பணி காரணமாக இந்த சாலையில் உள்ள கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடைக்கு வாடிக்கையாளர்கள் வருவதற்கு வசதியாக தற்காலிக நடை மேடை அமைத்து இருக்கிறார்கள். இந்த சாலையில் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்த வேண்டும், பைபாஸ் சாலை சந்திக்கும் இடத்தில உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
