செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்ககோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். தூத்துக்குடியில் வி.வி.டி. சிக்னல் அருகே வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், கடம்பூர் ராஜூ ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
அமைப்புச் செயலாளர் என். சின்னதுரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் ராஜசேகர், மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வில் உச்சகட்ட உட்கட்சி பூசல் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்த சி.தா. செல்லபாண்டியன் மேடைக்கு அழைக்கப்படாததால், மக்களோடு மக்களாக நின்று விட்டு சென்றுவிட்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பில் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே மாநில மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
