கோவில்பட்டியில் ஓடை மீது அமைந்த பாலத்தை அகற்ற எதிர்ப்பு; கோவில் முன்பு அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்
கோவில்பட்டி பிரதான சாலையோரம் உள்ள நீர்வரத்து ஓடையின் மீது செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகம் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தது. நீர்நிலைகள் மீது பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவிட்டது.
இதையடுத்து கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடையின் மீது கட்டப்பட்டிருந்த கடைகள் கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் இடித்து அகற்றப்பட்டன. இந்நிலையில் நீர்வரத்து ஓடையின் மறுபுறம் ஒரு சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட பழமையான ஸ்ரீ மகேஸ்வரர் சமேத மாலையம்மன் திருக்கோவில் உள்ளது.
இந்தக் கோவில் நிர்வாகம் பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக ஓடையின் மீது தற்காலிக இரும்பு பாலம் அமைத்து இருந்தது. தற்போது இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி .27-ம் தேதி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு கோவில் நிர்வாகம் சார்பில் பிரதான சாலைக்கும் கோவிலுக்கும் இடையே நீர் வரத்து ஓடையின் மீது இருந்த தற்காலிக இரும்பு பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது.
இதனைக் கண்டித்து இன்று காலை நீர்வரத்து ஓடை மீட்பு குழுவினர், அதன் செயலாளர் க.தமிழரசன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர் கா. மகாலட்சுமி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை கோவில் முன்பு அமைக்கப்பட்ட கான்கிரீட் பாலம் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட மக்கள், பாலத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து புதிதாக கட்டப்பட்ட கான்கிரீட் பாலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. போலீசார் குவிக்கப்பட்டனர். வட்டாட்சியர் சுசீலா, காவல் ஆய்வாளர்கள் பத்மாவதி, சுகாதேவி, மங்கையர்கரசி உள்ளிட்டோர் நேரில் வந்து போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் பாலத்தை அகற்ற தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மணியாச்சி டி.எஸ்
பி. லோகேஸ்வரன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கான்கிரீட் பாலம் இடிப்பது தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.