• February 7, 2025

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

 அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற கோரிக்கை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஒற்றை தலைமை யார் என்பதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினரர்கள் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இது போல் தலைமைக்கழக நிர்வாகிகள் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க.பொதுகுழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்ட அளவில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் தாக்கல் செய்த மனுவில் புதிய தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றக் கூடாது என்ற தடையை மீறி 23-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் அவைத்தலைவரை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே வரும் 11-ந்தேதி பொதுக்குழுவை கூட்டுவது சட்ட விரோதமாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அ.தி.மு.க. விதிப்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டுகள் ஆகும். இந்த பதவிகளை தன்னிச்சையாக நீக்கி விட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர முடியாது. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக 15 நாட்களுக்கு முன்பு அனைத்து நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதியும் மீறப்பட்டுள்ளது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை ஓ.பன்னீர்செல்வம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. முதல் வழக்காக இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அப்போது, மனுதாரர் ஓ .பன்னீர்செல்வம் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில், சில வக்கீல்கள் ஆஜராகி இருந்தனர். இதையடுத்து, விசாரணையை நேரம் குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் மனு ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் மனு மீதான விசாரணையை நாளைக்கு(ஜூலை 7)ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *