கோவில்பட்டியில் லிங்கம்பட்டி கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி தாலுகா லிங்கம்பட்டி கிராமத்தில் குடியிருக்கும் 500-க்கும் மேற்பட்ட வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி 2013 -ஆம் ஆண்டு ஜூலை 4-ந்தேதியும், 2014-ஆம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதியும் கோவில்பட்டி தாலுகா அலுவலகம், உதவி- கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த மனு தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தகுதி அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க தேவையான அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளதால், அரசு ஏழை மக்களுக்கு 2.5 சென்ட் இடம் வீதம் இலவச வீட்டு மனை பட்டா வழங்க, தகுதி அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக தலைவர் அன்புராஜ் தலைமை தாங்கினார்.
இதில் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் பேச்சு முத்து, மாநில கொள்கை பரப்பு செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் பொன் மாடசாமி, மாநில பொறுப்பாளர் பொன்னுச்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் காளிமுத்து, நகர செயலாளர் செல்லத்துரை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்து லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் ராமகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், 15 நாட்களுக்குள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடத்தப்படும்’ என தெரிவித்துள்ளனர்.