சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை
!நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 53). மதபோதகரான இவர் அப்பகுதியில் ஊழியம் செய்து வந்ததுடன், பல்வேறு மாவட்டங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து சென்று ஊழியம் செய்து வந்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு, ஊழியம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட 12, 13 மற்றும் 8 வயதுடைய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட மொத்தம் 4 சிறுமிகளுக்கு ஆபிரகாம் பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் கூறிய தகவலின் அடிப்படையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட ஊரக உட்கோட்ட மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அனைத்து சாட்சிகளும் நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட மதபோதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இதுவரை 4 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







