காணாமல் போன பெண் பிணமாக கண்டுபிடிப்பு ; தலை, உடல் தனித்தனியே மீட்பு
தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தேவா நகரில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு பெண்ணின் தலை மட்டும் தனியாக கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஒரு முள் செடிக்குள் அந்த பெண்ணின் உடல் தனியே கிடந்தது. தலை மற்றும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அந்த பெண் தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரை சேர்ந்த ராஜு மனைவி அய்யம்மாள் (வயது 70) என்று தெரியவந்தது. இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜு இறந்து விட்டதால் அய்யம்மாள் அவரது மகன் பராமரிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்த அய்யம்மாள் காணாமல் போய்விட்டார். இது குறித்து அவரது மகன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில், அவர் காட்டுப் பகுதிக்குள் வந்தவர் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்றும், நாய்கள் அவரது உடலை கடித்து குதறியதில் தலையை தனியாக எடுத்து 20 மீட்டர் தூரத்தில் போட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







