தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் 2 கப்பல் கட்டும் தளங்கள்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
தூத்துக்குடியில் உலக தரம் வாய்ந்த 2கப்பல் கட்டும் தளங்கள் ரூ.30 ஆயிரம் கோடி செலவில் கட்டுவதற்காக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் உலக தரம் வாய்ந்த 2 கப்பல் கட்டும் தளங்கள் உருவாக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த 2 கப்பல் கட்டும் தளங்களை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதன் மூலம் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட், உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவ ரூ.15,000 கோடியை முதலீடு செய்யும், இதன் மூலம் முதல் கட்டத்தில் 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும். மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட், ரூ.15,000 கோடி முதலீட்டில் மற்றொரு உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும்.
இது 45,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்த துறையில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.







