• June 17, 2025

தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள்; தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.100 கோடிக்கு மேல் மீன் வர்த்தகம்

 தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள்; தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.100 கோடிக்கு மேல் மீன் வர்த்தகம்

தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்துக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கிழக்குக்கடற்கரை எல்லையான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கபப்ட்டு இருந்தது. தடைக்காலம் முடிந்து 15-ந்தேதி கடலுக்கு செல்லவேண்டும். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் செல்லவில்லை. நேற்று கடலுக்கு சென்றனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 225 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இரவு 9 மணிக்கு மீனவர்கள் கரைக்கு திரும்பினர். பின்னர் அவர்கள் பிடித்து வந்த மீன்கள் ஏல கூடத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. நேற்று முதல் நாள் என்பதால் மீன் வியாபாரிகள் அதிக அளவு குவிந்தனர். 

கேரள வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை வாங்கியதால் மீன்களின் விலை 3 மடங்கு வரை அதிகரித்து காணப்பட்டது. இதனால் தூத்துக்குடி மீன் வியாபாரிகள் மீன்களை ஏலம் எடுக்கமுடியாமல் தவித்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் 5 மணி நேரத்துக்குள் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மீன் வர்த்தகம் நடந்ததாக கூறப்படுகிறது.,

இதனால் விசைப்படகு உரிமையாளர்களும் மீன்பிடி தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்று இரண்டாவது நாளாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 195 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று உள்ளனர். இன்றும் கேரளா மீன் வியாபாரிகள் வருவார்க்ள என்பதால், மீன்கள் அதிக விலைக்கு ஏலம் போகும் என்று விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *