பாகிஸ்தான் மக்களை வெளியேற்ற கோரி பாஜக ஆர்ப்பாட்டம்; கோவில்பட்டியில் நடந்தது

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள பாகிஸ்தான் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும். தீவிரவாத செயல்களுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கோவில்பட்டியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.. நகரத் தலைவர் காளிதாசன், ஒன்றிய தலைவர்கள் புருஷோதராஜா, ராமர் பாண்டியன், முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், திரளான கட்சியினர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து மனு அளித்தனர், அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் நடந்த மிகக் கொடூரமான தாக்குதல்சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானிய குடிமக்களுக்கான விசா சேவைகளை (நீண்ட கால தூதரக மற்றும் அதிகாரப்பூர்வ விசாக்கள் தவிர) நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தங்களுடைய ஆளுமைக்கும், அதிகாரத்திற்கும் உட்பட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள், காலாவதியான விசாக்கள் வைத்திருப்பவர்கள் அல்லது விசாக்கள் இடைநிறுத்தப்பட்ட அனைத்து பாகிஸ்தானியர்களையும், உடனடியாக அடையாளம் காணுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இது ஒரு ஆபத்தான தேசிய பாதுகாப்பு குறித்த விஷயமாகும். எனவே தாங்கள் அத்தகைய நபர்களின் விவரங்களை தாமதமின்றி பட்டியலிட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.
இந்த கோரிக்கை மனுவை உடனடியாக கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதை தாங்கள் உறுதி செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.








