நிழலில்லா நாள்- பின்னணி விவரம்

சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பது பழமொழி.
சிறு குச்சியும் பூமியை அளக்க உதவும் என்பது முதுமொழி!
ஆச்சரியமாக இருக்கிறதா? இதை 2,200 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் செய்து காட்டினார். அவர், எரட்டோஸ்தனிஸ். பண்டைய கிரேக்கத்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரின் நூலக தலைமை நூலகர் இவர்.
ஒரு நாள் நூல்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது படித்த ஒரு தகவல் அவரை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21 அன்று அலெக்சாண்ட்ரியா அருகே சைன் நகரில் கிணறுகளில் நண்பகல் நேரத்தில் சூரிய ஒளி கிணற்றின் அடித்தரையைத் தொடுகிறது என்று படித்தார்.
பொதுவாகச் சூரிய ஒளி கிணற்றின் அடித்தரையைத் தொடாது, சுற்றுச் சுவர்களில்தான் விழும். கிணற்றின் அடித்தரையை தொட வேண்டுமென்றால் சூரிய ஒளி அங்கு நண்பகல் நேரத்தில் செங்குத்தாக விழ வேண்டும். நண்பகல் நேரத்தில் செங்குத்தாக இருக்கும் பொருட்களின் நிழல் தரையில் விழுவதில்லை.
பொதுவாக நாம் குச்சியைச் செங்குத்தாக நட்டு வைத்தால் சூரிய ஒளியின் நிழல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நண்பகல் நேரத்தில் குறைந்த நீளத்தில் இருக்கும். நிழலே இல்லாமல் இருக்காது. ஆனால், ஆண்டில் இரண்டு நாட்களில் மட்டும் நண்பகல் நேரத்தில் செங்குத்தான பொருட்களின் நிழல் அதனைச் சுற்றி விழாது.
இதைத்தான் வானவியலில் நிழலில்லா நாள் எனக் கொண்டாடப்படுகிறது. அப்படி ஒரு நிழலில்லா நாள்தான் ஜுன் 21 அன்று சைன் நகரில் ஏற்பட்டது.

இந்த நிழலில்லா நாள் மார்ச் 21 அன்று பூமத்திய ரேகை பகுதிகளில் ஏற்பட்டது. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு நோக்கி நகர்ந்து ஏப்ரல் 9 அன்று தமிழகத் தென்கோடியான கன்னியாகுமரியில் ஏற்படுகிறது. அப்படியே ஒவ்வொரு நாளும் வடக்கு நோக்கி நகர்ந்து கோவில்பட்டியில் ஏப்ரல் 13 அன்றும், சென்னையில் ஏப்ரல் 24 அன்றும் ஏற்படுகிறது. பிறகு வடக்கு நோக்கி நகர்ந்து ஜுன் 21 அன்று கடைசியாக குஜராத் பகுதிகளில் நிழலில்லா நாள் ஏற்படுகிறது. பிறகு ஏற்படாது.
இதற்கு காரணம், இந்த நிழலில்லா நாள், கடக ரேகை (tropic of cancer) மற்றும் மகர ரேகைக்கு(tropic of Capricorn) இடைப்பட்ட பகுதியில்தான் நிகழும். இதற்குக் காரணம், பூமி 23.5 டிகிரி சாய்வாக சுற்றுவதால்தான்.
ஒரு வேளை பூமி நேராகச் சுற்றிக்கொண்டிருந்தால் ஆண்டு முழுவதும் பூமத்திய ரேகை பகுதிகளுக்கு மட்டும் நண்பகல் நேரத்தில் செங்குத்தான பொருட்களின் நிழல் தரையில் விழாது. அதாவது, பூமத்திய ரேகை பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் நிழலில்லா நாள்தான். ஆனால், வேறெந்த பகுதிகளுக்கும் இதுபோல் நிழலில்லா நாள் வராது.
இப்பரிசோதனையை இம்மாதத்தில் நாமும் தமிழகத்தில் செய்து பார்க்கலாம். அதற்குத் தேவை நேரான நீண்ட குச்சி. சென்னையில் நண்பகல் நேரத்தில் நிழல் விழும். குச்சியைத் தரையில் செங்குத்தாக நட்டு காலை 11.50 மணியளவில் இருந்து நண்பகல் 12.30 வரை இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை நிழலின் நீளத்தை அளந்துகொள்ள வேண்டும். இதில் வரும் குறைந்தபட்ச நிழலின் நீளத்தையும், குச்சியின் நீளத்தையும் வகுத்தால் நமக்குக் கிடைப்பது தோராயமாகச் சூரியக்கதிர் சென்னையில் நடப்பட்ட செங்குத்துச் குச்சியோடு ஏற்படுத்தும் கோணம்.
இதே கோணம்தான் பூமியின் மையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வரையப்பட்ட நேர்க்கோட்டுக்கும் சென்னைக்கு வரையப்பட்ட நேர்கோட்டுக்கும் இடையே உள்ள கோணம்.
இக்கோணத்தை சென்னையின் அட்ச ரேகைக்கும் கன்னியாகுமரியின் அட்ச ரேகைக்கும் இடையே உள்ள தொலைவால் வகுத்தால் வருவது பூமியின் ஆரம். இந்த ஆரத்தை 2 π அதாவது 6.28 ஆல் பெருக்கினால் வருவதுதான் பூமியின் சுற்றளவு. இதேபோல் நீங்கள் வசிக்கும் பகுதியில் இருந்தும் இப்பரிசோதனையைச் செய்து பார்க்கலாம்.
உலகெங்கும் பல நாடுகளில் உள்ள பள்ளிகள் இந்த நிழலில்லா நாளில் எரட்டோஸ்தனிஸ் பரிசோதனையைச் செய்து பூமியின் ஆரத்தை, சுற்றளவை அளக்கிறார்கள். அது மட்டுமல்ல இந்த நிழலில்லா நாளில் பூமி தன்னைத்தானே சுற்றும் வேகத்தைக் கண்டறியலாம். அதேபோல் நாம் இருக்கும் இடத்தின் உண்மையான வடதிசை எது என்றும் கண்டறியலாம். நாம் சாதாரணமாக நினைக்கும் நிழலை வைத்துப் பல ஆய்வுகள் செய்யலாம். அறிவியலைப் பொறுத்தவரை ஒளி மட்டுமல்ல நிழல்கூட இயற்கையின் உண்மையை எடுத்துக்காட்டும்


