குழந்தை வரம் அளிக்கும் சென்னிமலை முருகன் கோவில்

ஈரோடு அருகில் உள்ளது சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். சுந்தசஷ்டி கவச பாடல் அடங்கிய நூலை, பாலதேவராய சுவாமி அரங்கேற்றிய திருத்தலம் இதுவாகும்.
கந்தசஷ்டி கவசத்தில் வரும் ‘சிரகிரி வேலவன்” எனும் வரிகள், சென்னிமலை முருகப்பெருமானைக் குறிப்பதாகும்.
சென்னிமலை அருகில் இச்சிப்பாளையத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ளது இக்கோவில். இதன் படிக்கட்டுகள் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக இல்லாமல், பக்தர்கள் ஏறிச் செல்ல வசதியாக சரிவாக அமைக்கப்பட்டுள்ளன.
படிகளில் ஏறிய உடனே கடம்பவனேசுவரர், கந்தர், இடும்பன் ஆகியோரை தரிசிக்கலாம், பின்னர் வள்ளியம்மன் பாதம் என்ற மண்டபத்தைக் கடந்து சென்றால், முத்துக்குமார சாவான் என்னும் மலைக் காவலர் சன்னிதியை பார்க்கலாம். படிக்கட்டில் நடக்கும்போது நீண்ட இலைகளுடன் கூடிய துரட்டி மரம் என்ற மிகப் பழமையான மரம் ஒன்று உள்ளது. துஷ்ட சக்திகளால் பீடிக்கப்பட்டவர்கள், இம்மரத்தை நெருங்கும்போது அவை விலகும் என்கிறார்கள். அதற்கடுத்து வரும் ஆற்றுமலை விநாயகரை தரிசித்து மேலே சென்றால் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம்.
கிழக்கு நோக்கிய சன்னிதியில் இருபுறமும் அம்மையும், அப்பனும் அரவணைக்க, சுவாமி தனிச் சன்னிதியில் இருந்து தனித்து அருள்பாலிக்கிறார். அவருக்கு முன்பாக விநாயகரும், வலதுபுறத்தில் உமையவல்லி உடனுறை மார்க்கண்டேசுவரரும், இடது புறத்தில் விசாலாட்சி உடனுறை விசுவநாதரும் குடும்ப சமேதராக சூழ்ந்திருந்து குமரனை மட்டுமின்றி, வழிபடும் பக்தர்களையும் ஆசீர்வதிக்கின்றனர்.
கருவறையின் பின்புறம் முருகனின் தேவியர்களான வள்ளி-தெய்வானை இருவரும் தனிச் சன்னிதியில் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கின்றனர். இவர்கள் இருவரது திருவுருவங்களும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பின்னால் பொன்நாக்கு சித்தரின் சன்னிதி வேல் கோட்டமாகக் காட்சியளிக்கிறது. மலைமீது நீண்டநாள் தவம் இருந்த இவர், பின்நாளில் ‘புண்ணாக்கு சித்தர்’ என்று அழைக்கப்பட்டதாகவும். சென்னிமலை வரலாற்றை இவரே இயற்றினார் என்றும் கூறப்படுகிறது. இவர் சன்னதிக்கு பின்புறம் சரவண மாமுனிவர் வாழ்ந்த குகையும், சமாதியும் இருக்கிறது.
சஷ்டியில் விரதமிருந்து சென்னிமலை ஆண்டவனை வழிபடுவோருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருமணம், விவசாயம், பிற தொழில் சார்ந்த செயல்களில் ஈடுபடும்போது, இத்தல முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து சிரசுப்பூ உத்தரவு கேட்டு செயல்களைத் தொடங்குவதும் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது.
