• June 15, 2025

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்திய ரூ.80 கோடி போதைப்பொருள் பறிமுதல்

 தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்திய ரூ.80 கோடி போதைப்பொருள் பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு போதைப்பொருட்கள் கடல் மார்க்கமாக வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு நோக்கி, கருங்கற்கள் ஏற்றிக்கொண்டு சென்ற சிறிய கப்பல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த கப்பலை  தடுத்து நிறுத்துமாறு கடலோர காவல் படைக்கு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். நடுக்கடலில் சென்று கொண்டிருந்த பார்ஜைரை மடக்கி நிறுத்தி கடலோர காவல் படையினர் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். 

அதில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 16 பார்சல்களில் ஹசீஸ் எனும் செறிவூட்டப்பட்ட 30 கிலோ கஞ்சா எனும் போதைப்பொருள் கடத்தப்படுவது தெரியவந்தது.

இதனை கடத்தி சென்ற கப்பலில்  வேலை செய்து வரும் ஆலந்தலையை சேர்ந்த கிளிப்டன், அவருக்கு கடத்தலில் உதவியாக இருந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நவமணி ஆகியோரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிடிபட்ட இருவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு போதைப்பொருளை கடத்தி செல்வதும், அதன் சர்வதேச மதிப்பு ரூ.80 கோடி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருள் எப்படி கிடைத்தது? அவர்களின் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *