உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கிட வேண்டும்; முதல் -அமைச்சருக்கு கோரிக்கை

தமிழ்நாடு பட்ஜெட்டில் உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திற்கு குறைந்தபட்சம் 20 கோடி நிதி ஒதுக்கிட வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் மாநிலத் தலைவர் மா.கிருஷ்ண மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை மற்றும் இதர துறைகளிலும் இயங்கும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களுக்கும் ஜிஎஸ்டியில் ஒரு சதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் 3 சதம் நிதி அமைப்புசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். பட்ஜெட்டில் உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திற்கு குறைந்தபட்சம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உப்பள தொழிலாளர் நலவாரியத்தை நடைமுறை செயல்பாட்டிற்கு துரிதமாக கொண்டு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசு உப்பள தொழிலாளர் நல வாரியத்திற்கு உப்பு உற்பத்தியில் மற்றும் உப்பு ஏற்றுமதியில் 1 சதம் லெவி ஒதுக்கீடு செய்திட வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென உரிய முழுமையான நிதி ஒதுக்கீட்டுடன் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் கொண்டு வர வேண்டும்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
