யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? மகன் விளக்கம்

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் (வயது 85). இவர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். 8 தேசிய விருதுகள் மட்டுமின்றி மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் பாடகர் யேசுதாஸ் வயதுமூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இது தொடர்பான செய்திகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் யேசுதாஸ் தற்போது அமெரிக்காவில் நலமுடன் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
