தை அமாவாசை தர்ப்பணம்
![தை அமாவாசை தர்ப்பணம்](https://tn96news.com/wp-content/uploads/2025/01/process-aws-2.webp)
வருடத்தில் வரும் மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்று தை அமாவாசை ஆகும். உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை இது என்பதால் இது தவற விடக் கூடாத மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
வருடத்தில் வரும் மற்ற 23 அமாவாசைகளில் விரதம் இருந்து, முன்னோர்களை வழிபட முடியாவிட்டாலும் இந்த ஒரு அமாவாசை அன்று மட்டும் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் வருடம் முழுவதும் அமாவாசை விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்ட பலன் கிடைக்கும்.
அதோடு நாம் செய்த பாவங்கள் மட்டுமின்றி, நம்முடைய ஏழு தலைமுறை முன்னோர்கள் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 29ம் தேதி புதன்கிழமை வருகிறது. ஜனவரி 28ம் தேதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் தேதி இரவு 07.21 வரை அமாவாசை திதி உள்ளது. இது பெருமாள் வழிபாட்டிற்குரிய புதன்கிழமையில், பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவது மற்றொரு தனிச்சிறப்பு ஆகும்.
இந்த நாளில் மூன்று முக்கிய பொருட்களை தானம் அளிப்பது மிக மிக சிறந்தது ஆகும். தை அமாவாசை அன்று எந்தெந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும், யாருக்கு தானம் அளிக்க வேண்டும், எந்த மாதிரியான பொருட்களை தானம் அளித்தால் நவகிரக தோஷங்களில் இருந்து விடுபட முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தை அமாவாசையில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் அளிப்பதுடன், தானம் வழங்குவது மிக மிக முக்கியமானதாகும். அதிலும் அந்தணர்களுக்கு தானம் வழங்க வேண்டும் என்பார்கள். எல்லா அந்தர்ணர்களுக்கும் தானம் அளிக்கக் கூடாது. முன்னோர்களுக்கு தர்ப்பண காரியங்கள் செய்து வைக்கும் அந்தணர்களுக்கு மட்டுமே தானம் அளிக்க வேண்டும். அமாவாசை என்பது சந்திரனுக்குரிய தினம் என்பதால் சந்திரனுக்குரிய பொருட்களான வெள்ளை நிற வஸ்திரங்கள், பச்சரிசி, பச்சை காய்கறிகள் ஆகிய மூன்று பொருட்களை தானம் அளிப்பது சிறப்பு. தர்ப்பண காரியங்கள் செய்யும் அந்தணர்களுக்கு இந்த 3 பொருட்களை தானம் அளித்தால் மட்டுமே அது முன்னோர்களை சென்று சேரும் என்பது நம்பிக்கை.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)