கோவில்பட்டி இந்திரா நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 3 ஆயிரம் வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் வாறுகால், மின்விளக்கு, குடிநீர், மற்றும் சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
இதனால் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையில், மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது இந்திரா நகரில் உள்ள தெருக்கள் அனைத்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
எனவே, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென வலியுறுத்தி இன்று கோவில்பட்டியில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமசாமி தாஸ் பூங்கா அருகே பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அவர்களுடன் போலீசார் ,மற்றும் இனாம் மணியாச்சி ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மழைக்காலம் முடிவடைந்தவுடன் ஒவ்வொரு பணிகளாக நிறைவேற்றித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
