கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து: உயிர்தப்பிய பயணிகள்

கோவையில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை சுரேஷ் என்ற ஒட்டுநர் ஓட்டி வந்த நிலையில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் பயணம் செய்தனர்.
பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது, இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கண்டதும் சுதாரித்து கொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு, பயணிகளை பேருந்திலிருந்து இறங்கும்படி அறிவுறுத்தினார். பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரின் இறங்கினர்.
இதனையடுத்து பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கிய சில நிமிடங்களில் தீ மளமளவென எரிந்து பேருந்து முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமானது. ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
