இந்தியாவை எந்த நாடும் நிராகரிக்க முடியாது: நிர்மலா சீதாராமன்

அமெரிக்காவின் வாஷிங்டனில், உலக வளர்ச்சி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இதில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
தொலைதூர நாடான அமெரிக்காவாக இருக்கட்டும், அண்டை நாடான சீனாவாக இருக்கட்டும், எந்த ஒரு நாட்டினாலும், இந்தியாவை புறக்கணிக்க முடியாது. இந்தியா ஜனநாயகம் மிக்க நாடு. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், தனது செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், உலகில் உள்ள ஒவ்வொரு 6 நபர்களிலும் ஒரு இந்தியர் இருக்கிறார். எனவே, இந்தியாவின் பொருளாதாரத்தை நிராகரிக்க முடியாது. வளர்ந்த நாடுகள் மற்றும் மிகப்பெரிய நாடுகளில் செயல்படும் பெரிய நிறுவனங்களில் திறமை வாய்ந்த இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வளர்ச்சிக்கான பாதையை வரையறுக்கும் இடத்தில் நாம் இருக்கிறோமா., என்று கேட்டால், இந்தியாவை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தின் மூலம் பணிகளை மேற்கொள்வதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முதல் பலதரப்பு வங்கி வரையில் அனைத்திலும் இந்தியா சிறந்த நாடாக இருந்து வருகிறது.
இந்திய பொருளாதாரம் முன்பாக., மிகப்பெரும் சவாலாக வேலை வாய்ப்பு திறன் உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பட்டம் முடித்து வெளியே வருகிறார்கள். ஆனால் இளைஞர்கள் பெற்றிருக்கும் டிகிரிக்கும் அவர்களுடைய வேலை வாய்ப்பு திறனுக்கும் இடையே இடைவெளி உள்ளதாக வேலை அளிப்பவர்கள் கருதுகிறார்கள். என குறிப்பிட்டுள்ளார்.
