கோவில்பட்டி அருகே ஜவுளி கடையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள துணிகளை அள்ளிச் சென்ற கும்பல்

கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அப்பனேரி மற்றும் மேலப்பட்டி விலக்கு பகுதியில் மொத்தம் நான்கு கடைகளில் நேற்று முன் தினம் நள்ளிரவுக்கு மேல் கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தது தெரிந்ததே…!
அப்பனேரி ஜி வி என் கல்லூரி ரோட்டில் உள்ள ஆர். வி. எஸ். ஸ்டோர் கடையில் இரும்பு ஷட்டர் கதவை உடைத்து ரூ. 97 ஆயிரம்கொள்ளையடிக்கப்பட்டது.
மேலப்பட்டி விலக்கு பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மகிழ் பேஷன்ஸ் என்ற ஜவுளி கடையில் நேற்று காலை கொள்ளை சம்பவம் பற்றி பக்கத்து கடைக்காரர் மூலம் அறிந்ததும் ஜவுளி கடையின் உரிமையாளர் கனகராஜ், நக்கல முத்தன்பட்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து விரைந்து வந்தார்.
ஷட்டர் கதவின் இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டார். கடைக்குள் சென்று பார்த்தபோது ஜவுளி ரகங்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. சி.சி. டி.வி. கேமரா ஒயர்கள் அறுக்கப்பட்டு டி. வி. ஆர். பாக்ஸ் திருடப்பட்டு இருந்தது.
கல்லாபெட்டியில் இருந்த 7000 ரூபாய் காணாமல் போய் இருந்தது. கடையிலிருந்து சேலைகள்,ரெடிமேட் பேண்ட், சட்டைகள், மேட்சிங் வேட்டி சட்டைகள் என ஏராளமானவை திருடப்பட்டிருந்தன.
இது பற்றி கடை உரிமையாளர் கனகராஜ் கோவில்பட்டி மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தார். சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் போலீசார் நேரில் வந்து முதல் கட்ட விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.
ஜவுளி கடையில் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் அளவுக்கு துணிமணிகள் திருட்டுப் போய் இருப்பதாக கடை உரிமையாளர் கனகராஜ் தெரிவித்தார்.



விலை உயர்ந்த சேலைகள் வைத்திருந்த அட்டை பெட்டிகளை வீசி விட்டு சேலைகளை எடுத்துச் சென்று இருக்கிறார்கள். கடையை முழுவதும் கணக்கெடுத்து பார்த்த போது 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கு ஜவுளி ரகங்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்துள்ளது என்று கடையின் உரிமையாளர் கனகராஜ் கவலையுடன் கூறினார்.
4 கடைகளிலும் கைவரிசை காட்டியது ஒரே கும்பல் என தெரிய வந்துள்ளது.கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன்புலன் விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
