தூத்துக்குடி மாநகராட்சி மேயருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி சிறக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் இந்தியாவிலேயே கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் மகத்தான பணிக்காக இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 27.9.2023 அன்று மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சந்தித்து, விருதினை காண்பித்து பாராட்டு பெற்றார். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா முன்னிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன், பேரூராட்சிகளின் இயக்குநர் கிரன் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் எஸ்.சிவராசு ஆகியோர் உடனிருந்தனர்