உலக இருதய தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையின் இருதய நலத்துறையான இதயாலயா தி ஹார்ட் சென்டர் சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அருள்ராஜ் மற்றும் இருதய நல நிபுணர் டாக்டர் நீலாம்புஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் பியர்ல் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் முகம்மது இப்ராகிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இளம் வயது மாரடைப்பை தவிர்க்கும் பொருட்டு கல்லூரி மாணவர்களுக்கு மன நலமும் -இருதய நலனும் என்ற தலைப்பில் மன நல சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவசைலம் உரையாற்றினார்.
இவ்விழாவை முன்னிட்டு டாக்டர் நீலாம்புஜன் மற்றும் குழுவினர் மாரடைப்பின் முதலுதவியான சி.பி.ஆர். செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தூத்துக்குடியை சார்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
உலக இருதய தினத்தின் ஒரு பகுதியாக நாளை 1ஆம் தேதி பொதுமக்களுக்காக இலவச இருதய சிகிச்சை முகாம் மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
