கவர்னர் டெல்லி செல்கிறார், தி.மு.க. அரசு டிஸ்மிஸ் என்ற செய்தி வரும்; ஆர்ப்பாட்டத்தில் டி.ஜெயக்குமார் பேச்சு

சென்னை வள்ளூவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க. சார்பில், தி.மு.க.அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-
இன்றைக்கு கிளைமேட்டும் நன்றாக இருக்கிறது.அதேபோல அரசியல் கிளைமேட்டும் மிகவும் நன்றாக உள்ளது.ஆளுநர் இன்றும் சில நாட்களில் டெல்லி செல்வதாக தகவல் உள்ளது. நல்ல செய்தி வரும்.விடியா அரசு டிஸ்மிஸ் என்ற செய்தி வரும். தமிழகத்திற்கே அன்றைக்குத்தான் தீபாவளி. எப்படி நரகாசூரன் ஒழிந்து சந்தோசப்பட்டார்களோ அதேபோல இந்த விடியாத அரசு,ஸ்டாலின் அரசு ஒழிந்தால் அன்றைக்குத்தான் தமிழகத்திற்குப் பெரிய தீபாவளி.
ஆட்சியா நடத்துகிறார்கள் இவர்கள். ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு வருடங்களில் எத்தனை கொலை,கொள்ளை,ஆட்கடத்தல்,கற்பழிப்பு,கட்ட பஞ்சாயத்து,உள்ளாட்சி பொறுப்பில் இருப்பவர்கள் குறித்துச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. வடை விற்பனை செய்பவர்கள்,சுண்டல் விற்பவர்கள் என அனைவரிடம் மாமூல் வசூல்.
ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அடாவடித்தனம்.38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி சென்று வடையும்,போண்டாவையும்.சுண்டலையும் சாப்பிட்டு வருகிறார்களே தவிர எந்த பலனும் இல்லை. இந்த இரண்டு வருடத்தில் தமிழகம் என்ன பலனைக் கண்டது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா, இல்லை. பொருளாதார வல்லூனர் குழு போட்டு இரண்டு வருடம் ஆகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனும்,பாலும் ஓடும் என்றார்கள். ஆனால் சாக்கடை தண்ணீர்தான் ஓடுகிறது.
ஒரு நாள் மழையில் சென்னையில் கிட்டதட்ட 160 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பொய் சொல்லிவிட்டு எங்கும் தண்ணீர் நிற்கவில்லை என்கிறார்கள். அப்படி என்றால் 5 கோடி என்ன ஆனது. மழை நீர் கால்வாய் போடுகிறோம்,தூர் வாருகிறோம் என்று சொல்லிவிட்டு 5 ஆயிரம் கோடி ஏப்பம்தானா. உலகத்திலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால் அது திமுகதான். அவரின் அப்பா ஆட்சி ஊழலுக்காக கலைக்கப்பட்டது.
அதேபோல தற்போது மிகப்பெரிய ஊழலுக்காகக் கலைக்கப்படுகின்ற ஆட்சி அது திமுக ஆட்சியாகத்தான் நிச்சயமாக இருக்கும். 30 ஆயிரம் கோடி ரூபாய்.இந்த 30 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தால் எத்தனையோ மாவட்டங்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யலாம். அந்த 30 ஆயிரம் கோடி ஊழலை இன்றைக்கு மத்திய அரசு தோண்ட ஆரமித்துள்ளது. ஸ்டாலினுக்கு என்ன பயம் இன்றைக்கு.செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் 90 சதவீதத்தினர் உள்ளே போவார்கள். திரைப்படங்களைப் போல திமுகவுக்கு இந்த மாதம் சிறைக்குப் போகும் மாதமாக இருக்கும். அடுத்து பொன்முடி போகப்போகிறார். அடுத்து அடுத்து கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் போகப் போகிறார். செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் அனைவரும் உள்ளே போகக்கூடிய நிலைமை வரும்.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கை இரண்டு மாதத்தில் முடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது. இல்லை என்றால் நாங்களே ஒரு குழுவைப் போட்டு விசாரிப்போம் என்றார்கள். அந்த அடிப்படையில் இன்றைக்கு நடவடிக்கை உள்ளது. கைது ஏன் இந்த ஆர்ப்பாட்டம். பத்திரிக்கையில் முன்பு கருணாநிதி உடன்பிறப்பே என்று எழுதுவார்.தற்போது பத்திரிக்கையில் உட்சா பிறப்பே என்று எழுதுகிறார்கள். அந்த அளவுக்கு இன்றைக்குக் கைதுக்கு பயப்படுகிறார்கள். அனால் வழக்குகளைக் கண்டு அஞ்சுகிற இயக்கம் அதிமுக கிடையாது. எப்படி பந்து அடிக்க அடிக்க எழுகிறதோ இதுபோலத்தான் நமது இயக்கமும்.
செந்தில் பாலாஜி கைதுக்கு ஏன் ஸ்டாலின் பதறுகிறார். செந்தில் பாலாஜியைப் பொறுத்தவரையில் பல விஷயங்கள் அவருக்குத் தெரியும்.எவ்வளவு,,யார் யாருக்கு அளித்தார் என்று தெரியும்.எங்குப் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று அவருக்குத் தெரியும். அமலாக்கத்துறை இதனை விடப்போவதில்லை.நான் குறிப்பிட்டதுபோல ஊழலுக்காகவே வீட்டிற்குப் போகும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும். ஜல்லிக்கட்டு போட்டியில் கமெண்டரி சொல்வார்கள்
.மோதி பார்,பிடி,ஓடு என்று சொல்வார்கள்.அதுபோலத்தான் இன்றைக்கு ஸ்டாலின் ஜல்லிக்கட்டு கமெண்டரிபோல ஆகிவிட்டார். அந்த வீடியோ வெளியீடு என்பது பயத்தின் உச்சமாக உள்ளது.அவர் எந்த அளவுக்குப் பயத்தில் உள்ளார் என்பதற்கு அந்த வீடியோவை சாட்சியாக உள்ளது.இவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கம்பி எண்ணுகின்ற நிலைமை ஏற்படும். ஊழல் செய்யும் புலிகள் எல்லாம் கோட்டையை விட்டு கம்பி எண்ணும் என்று தலைவர் தெரிவித்தார்.அந்த கம்பி எண்ணுகின்ற நாள் விரைவில் திமுகவுக்கு வந்துவிடும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.
