கிராம உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப டிசம்பர் 4-ம் தேதி எழுத்துத் தேர்வு; தென்காசி ஆட்சியர் தகவல்

தென்காசி மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தென்காசி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டதில் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு 4.12.2022 அன்று நடைபெறவுள்ளது
தென்காசி வட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஆலங்குளம் வட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும், செங்கோட்டை வட்டததிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் எஸ்ஆர்எம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.
மேலும் வீரகேரளம்புதூர் வட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியிலும், கடையநல்லூர் வட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு புளியங்குடி எஸ்.வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், சங்கரன்கோவில் வட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியிலும், திருவேங்கடம் வட்டத்திலும், சிவகிரி வட்டத்திற்கும் விண்ணப்பித்தவர்களுக்கு சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.
விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக தேர்வறை நுழைவு சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த கைபேசி எண்/மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வறை நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்
இவ்வாறு ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
