கோவிலில் தேங்காய் உடைப்பதன் தாத்பரியம் தெரியுமா…?

கோவிலில் தேங்காய் உடைப்பதை மிகவும் விசேஷமாகப் பக்தர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். தேங்காய் ஏன் உடைக்கிறோம். இதில் என்ன தாத்பரியம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்குத் தெரியாது.
நாம் தொன்று தொட்டு நினைத்த வேண்டுதல் நிறைவேறினால் கடவுளுக்குத் தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொள்வது வழக்கம்.
முக்கியமாகத் திருமணம், வீடு கட்டுதல், சொத்து வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்னரும் தேங்காய் உடைத்து பூஜை செய்கின்றோம்.
இதற்கு ஆன்மிகத்தில் இருக்கும் பொதுவான கருத்து, தேங்காயை உடைத்தவுடன் அதன் உட்பகுதியைப் போல் வெண்மையான மனதோடு இறைவனை நான் வழிபடுகிறேன் என்பதாகும்.
இதனால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.
தேங்காய் உடைப்பதன் தாத்பரியம்: தேங்காயின் மேல்பகுதி ஓடுதான் நம்முடைய அகங்காரம். தான் என்னும் அகங்காரத்தைக் களைந்தால்தான் இறைவனாகிய அவனுடைய அருளைப் பெற முடியும். சிலர் தேங்காய் உடைப்பதை, உலக மாயையாகிய ஓடைக் கடந்துதான் இறைவனின் அருளைப் பெற முடியும் என்று கூறுகின்றனர்.
ஜீவாத்மா, மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. தேங்காயின் உள்ளே இருக்கும் மென்மையான உள்பகுதியையும், நீரையும் மூடி, அவற்றை நாம் எடுக்கமுடியாமல் ஓடு தடுக்கின்றது.
தேங்காயை உடைப்பதன் மூலம் ஜீவாத்மா, பரமாத்மாவுக்கு இடையேயான தடை விலகுகிறது. அதற்கு நம்மை மனதளவில் ஒவ்வொரு முறையும் தயார்ப்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடே, இறைவனுக்குத் தேங்காயை உடைப்பதன் தாத்பரியம்.
இந்து தர்மத்தின் தனிச்சிறப்பு: மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.
ஆனால், தேங்காயைச் சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.
அதுபோல் வாழைப்பழத்திற்கு அந்த குணம் உண்டு. வாழை மரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றி வருகிறோம். இதுவே இந்து தர்மத்தின் தனிச்சிறப்பு.
தேங்காய் உடைப்பதற்கான சிறப்புகள்:கோவிலில் தேங்காய் உடைப்பதினால் பல அதிர்ஷ்டங்கள் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம். தேங்காய் பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரரின் சின்னமாகக் கூறப்படுகிறது.
புராணங்களின்படி, விஷ்ணு பூமிக்கு வந்தபோது, மனிதர்களின் வசதிக்காக லட்சுமிதேவி, தென்னை மரம் மற்றும் காமதேனுவை அழைத்து வந்தார் என்று கூறப்படுகிறது.
புதியதாகத் தொழில் தொடங்கும் போதும் தேங்காய் உடைத்து ஆரம்பித்தால் தடையின்றி வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தேங்காய் நீரும் புனிதமாகக் கருதப்படுகிறது. தேங்காய் நீர் எதிர்மறை சக்தி மற்றும் வீட்டில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகளை நீக்கும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் வீடு கட்டுவதற்கான அடித்தளத்தின் போது தேங்காய் உடைத்து தொடங்குகிறார்கள்.இப்படி தேங்காய்க்கும், ஆன்மீகத்திற்கும் நிறைய சம்பந்தம் இருக்கின்றது.
-காசி விஸ்வநாதன்-திருநெல்வேலி
