இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை (இந்திய மதிப்பில் ரூ.9 ஆயிரத்து 235) தாண்டி விட்டது. ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து விட்டது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு உயர்மட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

“சர்வதேச எண்ணெய் சந்தைகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் இல்லை. விலை அழுத்தத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இப்போதைக்கு தாங்கிக் கொள்ளும்.
அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயும், பெட்ரோல், டீசலும் கையிருப்பில் உள்ளன. தடையற்ற வினியோகத்துக்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.

இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டிக்கொள்ளவும், சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கும் போது நஷ்டத்தை தாங்கிக்கொள்ளவும் அனுமதிக்கும் கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது”
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்,







