• March 6, 2026

வாழ்நாள் வரை நான் உங்களுடன் இருப்பேன் ; கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின்  குடும்பத்தினரிடம் விஜய் உறுதி

 வாழ்நாள் வரை நான் உங்களுடன் இருப்பேன் ; கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின்  குடும்பத்தினரிடம் விஜய் உறுதி

கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி த.வெ.க. சார்பில் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ‘வீடியோ கால்’ மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். ஆனால் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.
இந்த சந்திப்பு இன்று காலை மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது. இவர்களோடு, நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்தனர்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை சேர்ந்த 235 பேரை த.வெ.க. தலைவர் விஜய் இன்று தனித்தனி அறைகளில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உள்ளார். இதன்படி, ஒவ்வோர் அறைக்கும் சென்ற அவர், அந்த அறையில் வைக்கப்பட்ட, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர், அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.

சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் கரூரில் வந்து சந்திப்பேன். வாழ்நாள் வரை நான் உங்களுடன் இருப்பேன். குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன். உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து தருவேன். வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி என அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தவெக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *