முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவில்பட்டி வருகை; வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்


முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை 28 மற்றும் 29-ந்தேதிகளில் தென்காசி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தென்காசி செல்லும் வழியில் கோவில்பட்டி வருகிறார்.
நாளை பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து கார் மூலம் கோவில்பட்டிக்கு வருகிறார்.
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் நகர திமுக அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. முன் பகுதியில் கருணாநிதியின் முழுஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

திமுக கட்சி அலுவலகம் மற்றும் கருணாநிதி சிலையை மு,க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கட்சி அலுவலகம் உள்பகுதியை அவர் பார்வையிடுகிறார்.
முன்னதாக கோவில்பட்டி எல்லையில் முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் நகர் முழுவதும் வரவேற்பு வளைவுகள் மற்றும் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன,
புதிய கட்சி அலுவலகம் அமைந்துள்ள இளையரசனேந்தல் சாலையில் வெகு தூரத்துக்கு இருபுறமும் திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன. கட்சி அலுவலகம் அருகே மின் அலங்கார `கட் அவுட் ‘அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ரெயில்வே சுரங்க பாலம் அருகே இருந்து திமுக கட்சி அலுவலகம் வரையிலும் இரவை பகலாக்கும் வகையில் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன,
சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் தொடங்கி உள்ளது. சாலையில் குவிந்து கிடைக்கும் மணலை நவீன இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். வேகத்தடைகள் உயரம் குறைக்கப்படுவதுடன், சாலைகளில் பேட்ச் ஒர்க் பணிகளும் மும்முரமாக நடந்ததை காண முடிந்தது,.







