நெல்லையப்பர் கோவிலின் 56 வயது காந்திமதி யானை உயிரிழப்பு

நெல்லையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லையப்பர் திருக்கோவில் உள்ளது. 1985-ம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் கோவிலுக்கு யானை நன்கொடையாக கொடுக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் காந்திமதி யானை முன்னே செல்ல திருவிழா விமரிசையாக நடைபெறும்.
56 வயதான யானைக்கு கால்களில் மூட்டு வலி ஏற்பட்டு சில நாட்களாக நடமாடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ குழுவினர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வந்தும் யானை உறங்காமல் நின்றபடியே தூங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
.இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் யானை திடீரென கீழே விழுந்தது அதனால் மீண்டும் எழுந்திருக்க முடியவில்லை. யானை பாகன் எவ்வளவோ முயற்சி செய்தும் அது கை கொடுக்காததை அடுத்து இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நெல்லையில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் விரைந்து சென்று யானையை சோதனை செய்த நிலையில் இரண்டு பெரிய கிரேன்கள் கொண்டு வரப்பட்டு அந்த கிரேன்கள் மூலம் யானையின் உடலில் பெல்ட் கட்டி தூக்கி நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் நின்று இருந்த யானை மீண்டும் கீழே படுத்தது. இதனை அடுத்து சில மணி நேரங்களில் காந்திமதி யானை உயிரிழந்தது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
