• June 6, 2025

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணம் செய்த விமானத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல்; அதிகாரிகளின் 4 மணிநேர பதற்றம்

 முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணம் செய்த விமானத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல்; அதிகாரிகளின் 4 மணிநேர பதற்றம்

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று  இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதல்-அமைச்சர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழக தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் இரண்டாம் தேதி வரை அங்கு தங்கியிருப்பார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து பயணம் செய்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் அதிகாரிகள் பதற்றமடைந்தனர். முதல்-அமைச்சர் சென்ற  விமானம் புறப்பட்ட பிறகே வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான்  மின்னஞ்சலை அதிகாரிகள் பார்த்ததாக கூறப்படுகிறது.
மிரட்டல் செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உஷார் ஆவதற்குள்  விமானம் புறப்பட்டு விட்டது. அவர்களால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற விமானம் துபாயில் இறங்கும் வரை 4 மணி நேரம் உச்சக்கட்ட பதற்றத்துடன் அதிகாரிகள் இருக்க நேர்ந்தது. துபாய் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட  சோதனையில் எந்தவித வெடிகுண்டு பொருட்களும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதும் விமானம் அமெரிக்கா புறப்பட்டு சென்றது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணித்த விமானம் பாதுகாப்பாக அமெரிக்காவில்  தரையிறங்கியது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டதால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். மேலும் மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *