கோவில்பட்டி அஞ்சல் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை தொடக்கம்

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு குடிமகனும் தங்களுடைய வீட்டில் வரையறுக்கப்பட்ட விதிகளின் படி வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசியக்கொடி ஏற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி இந்திய அஞ்சல் துறையின் சார்பில் நாடு முழுவதிலும் உள்ள அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு தேசிய கொடியின் விலை ரூ.25 ஆகும்.
கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் பொதுமக்களின் வசதிக்காக தேசிய கொடியின் விற்பனைக்கென தனிக்கவுண்ட்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சு.சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பொதுமக்கள் வசதிக்காக அஞ்சல் நிலையத்தின் வெளியே தனி கவுண்ட்டர் அமைத்து இரவு 10 மணி வரை தேசிய கொடி விற்பனை நடந்து வருகிறது.

