• May 15, 2025

சென்னையில் 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை

 சென்னையில் 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை

நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் சார்பில் 244 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது..  இவற்றில் சென்னையில் உள்ள கல்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவில் கடைசியாக கடந்த 1971-ம் ஆண்டு போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் இன்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.. அதேபோல், இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையின்போது மின்சாரம் துண்டிப்பு, இணைய சேவை துண்டிப்பு, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை நடத்தப்படும். குறிப்பாக வான்வழி தாக்குதலின்போது ஒலிக்கப்படும் சைரன் ஒலிப்புகளை எழுப்பியும் போர் ஒத்திகை நடைபெற இருக்கிறது. மேலும், சில பொது இடங்களுக்கான அனுமதி தடை செய்யப்பட்டும் ஒத்திகை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.  இதன்படி, சென்னையில் 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடந்தது. 

சென்னையில் அணுமின் நிலையம் தாக்கப்பட்டால் அவற்றை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றி ஒத்திகை நடந்தது.  மாவட்ட கலெக்டர், பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள், வீரர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதன்படி மின் விளக்குகளை அணைத்தும், மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியும் ஒத்திகை பார்க்கப்படும்.  இதில், பல்வேறு துறைகளை சேர்ந்த வீரர்கள், மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.  போர்ச்சூழலின்போது, எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி மக்களுக்கு செயல் விளக்கம் தரப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *