போலீஸ் நிலையங்களில் புகார் பதிவு செய்ய மறுத்தால் கடும் நடவடிக்கை; மாவட்ட சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் புகார் பதிவு செய்யவில்லை என்று ஏதேனும் புகார் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் சில சம்பவங்கள் காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த சம்பவங்களில் போலீசார் மீது எந்தவித தவறும் இல்லை என்பதும், அந்த சம்பவங்களில் நடந்த உண்மைத் தன்மை குறித்து விளக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வரவேற்பாளர்கள் பணியில் இருப்பார்கள்.
இதனால் மக்கள் போலீஸ் நிலையங்களில் மனு கொடுக்க செல்லும்போது அனைத்து மனுக்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து ரசீது கொடுக்கப்படும். எனவே போலீஸ் நிலையங்களில் புகார் மனு பெற மறுத்து நிராகரிப்பது குறைந்துள்ளது. அதுபோன்று புகார் பதிவு செய்யவில்லை என்று ஏதேனும் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் முழுநேரம் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று உட்கோட்ட அளவிலான சோதனைச் சாவடிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.


