தேனி அருகே இளையராஜா பண்ணை தோட்டத்துக்கு பவதாரணி உடல் வந்தது

கல்லீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 5 மாதமாக இலங்கையில் ஒரு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த பவதாரணி நேற்று முன்தினம் இறந்து போனார். அப்போது இளையராஜா இலங்கையில் தான் இருந்தார்,. கொழும்பு மருத்துவமனைக்கு பவதாரணி உடல் கொண்டுசெல்லப்பட்டு உடற்கூராய்வுக்கு பிறகு தனி விமானம் மூலம் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை கொண்டுவரப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு , பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. திரையுலகினர், பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பவதாரணி உடல், தேனி அருகே லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவுக்கு சொந்தமான பண்ணை தோட்ட வளாகத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பவதாரணி உடல் இரவு 10.30 மணிக்கு அம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு லோயர்கேம்ப் புறப்பட்டது. அந்த வேனை தொடர்ந்து இளையராஜா மற்றும் குடும்பத்தினர் தனி வாகனங்களில் பின்தொடர்ந்து வந்தனர். இரவு முழுவதும் பயணம் செய்து இன்று காலை 11 மணி அளவில் லோயர்கேம்ப் பண்ணை தோட்டம் வந்தடைந்தார்கள்.


முன்னதாக காலையிலேயே பண்ணை தோட்டத்தில் இளையராஜா உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். பவதாரணி உடலை சுமந்து வந்த ஆம்புலன்ஸ் வந்ததும் கூடி இருந்த அனைவரும் கதறி அழுதனர். வேனில் இருந்து பவதாரணி உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழையை இறக்கி வீட்டின் வராண்டா பகுதியில் வைத்தனர்.
பவதாரணி உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே பண்ணை தோட்டத்தில் பவதாரணி உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
ஏற்கனவே இளையராஜாவின் தாயார், மனைவி ஆகியோர் உடல்கள் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டன. அந்த இடத்தில் தனித்தனியாக சமாதி கட்டப்பட்டுள்ளது. அவற்றுக்கு அருகில் குழி தோண்டி பவதாரணி இன்று மதியத்துக்கு மேல் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
