தயாரிப்பாளர்கள் புறக்கணிக்கிறார்கள்; இயக்குனர் சேரன் குமுறல்

சேரன் இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய பாண்டவர் பூமி, வெற்றி கோடி கட்டு திரைப்படங்களானது மாபெரும் வெற்றியை சந்தித்தது.
இப்படங்களின் வெற்றி மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து, நடிகராகவும் இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கிய சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது நடிப்பு திறமையும் வெளிப்படுத்தினார்.

பின்னர் இவர் இயக்கத்தில் இவரே நடித்து வெளியான ஆட்டோகிராப் திரைப்படமானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. இறுதியாகத் திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார். அப்படம் நல்ல விமர்சனங்களையே பெற்றது.
நடிகர் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து படம் இயக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், விஜய் சேதுபதிக்கு படப்பிடிப்பு தேதி இல்லாததால் அப்படம் கைவிடப்பட்டது. அவர் இயக்கிய ஜர்னி இணையத் தொடர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சமீபத்தில் ‘நரி வேட்டை’ என்ற மலையாள படத்தில் சேரன் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற சேரனிடம், “நீங்கள் ஏன் இப்போது படங்களை இயக்கவில்லை?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு சேரன் கூறியதாவது:-
நான்தான் படம் இயக்காமல் இருக்கிறேன் என நினைக்கிறார்கள். நான் படம் இயக்க வேண்டும் என மக்கள் விருப்பப்பட்டாலும் தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை. நிறைய நல்ல திரைப்படங்களை இயக்கிவிட்டேன். 4 தேசிய விருதுகளையும் பெற்றுவிட்டேன். ஆனாலும், இப்போது ஏன் தயாரிப்பாளர்கள் புறக்கணிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

தயாரிப்பாளர்களை நாம் தேடிச்சென்றாலும் ஏகப்பட்ட மறைமுக காரணங்களால் நிராகரிக்கப்படுகிறேன். சினிமாவில் இறுதியாக நான் என்ன வெற்றி கொடுத்தேன் என்றுதான் பார்ப்பார்கள். இல்லையென்றால், பழைய இயக்குநர், அவரின் மனநிலை நமக்கு ஒத்துவருமா என நினைக்கின்றனர். என் பக்கம் எந்த தவறு இருந்தாலும் நான் சரிசெய்துகொள்வேன். தயாரிப்பாளர்கள், நடிகர்கள் நம்பிக்கை கொடுத்து பின்வாங்கி விடுகின்றனர். ஆனால், நிச்சயம் மீண்டும் நல்ல படங்களை இயக்கத்தான் போகிறேன்.” இவ்வாறு இயக்குனர் சேரன்தெரிவித்தார்.

