கோவில்பட்டியில் மாநில சீனியர் ஆண்கள் ஆக்கி: சென்னை மாவட்ட அணி ‘சாம்பியன்’

Oplus_16908288
கோவில்பட்டியில் மாநில சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டி நடைபெற்றது. கடந்த நான்காம் தேதி தொடங்கி 3 மைதானங்களில் நடந்த இந்த போட்டியில் 33 மாவட்ட அணிகள் பங்கேற்றன.
நேற்று காலை நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் சென்னை மாவட்ட அணி அபாரமாக ஆடி 9-2 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி மாவட்ட அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் விருதுநகர் மாவட்ட அணி 2-1 என்ற கோல் கணக்கில் மதுரை மாவட்ட அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் 5-4என்ற கோல் கணக்கில் மதுரை மாவட்ட அணி திருநெல்வேலி மாவட்ட அணியை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பெற்றது.

இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த திருநெல்வேலி மாவட்ட அணி நான்காவது இடமம் பெற்றது.
தொடர்ந்து மாலை 4மணியளவில் நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னை மாவட்ட அணியும், விருதுநகர் மாவட்ட அணியும் பலப்பரீட்சை நடத்தின.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த ஆட்டத்தில் ரசிகர்களின் ஆரவாரம் அதிகம் இருந்தது. ஆரம்ப முதல் இறுதி வரை சென்னை மாவட்ட அணியின் ஆட்டம் சூடு பிடித்தது விருதுநகர் மாவட்ட அணியினர் ஈடு கொடுக்க முடியாமல் திணறினார்கள்.

சென்னை மாவட்ட அணியினர் அடுத்தடுத்து கோல்களை போட்டு அதிரடி காட்டினார்கள். ஆனால் விருதுநகர் அணியினரால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. இறுதியில் சென்னை மாவட்ட அணி 12-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்று ‘சாம்பியன் ‘ பட்டத்தை தட்டிச் சென்றது.
தோல்வியடைந்த விருதுநகர் மாவட்ட அணி இரண்டாவது இடத்தை பெற்றது

இதைத் தொடர்ந்து நடந்தபரிசளிப்பு விழாவுக்கு ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமைநாயகம், திருநெல்வேலி மாவட்ட ஆக்கி சங்க தலைவர் சேவியர் ஜோதி சற்குணம், தூத்துக்குடி துறைமுக ஆக்கி வீரர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கே ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே ஆர் அருணாச்சலம், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கி சிறப்பித்தார்கள் விழாவில் நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் காளிதாஸ் முருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் முதல்வர் ராஜேஷ்வரன், கே ஆர் கலைக்கல்லூரி முதல்வர் மதிவாணன், தென்காசி மாவட்ட ஆக்கி சங்க செயலாளர் பால் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடற் கல்வி ஆசிரியர் ஆல்ட்ரின் அதிசயராஜ் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி நன்றி கூறினார் போட்டிக்கான ஏற்பாடுகளையும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொறுப்பாளர்கள் காளிமுத்து பாண்டிராஜா, கிருஷ்ணமூர்த்தி, மாரியப்பன், சுரேந்திரன், சுரேஷ்குமார், வேல்முருகன், மனோஜ், காளிதாஸ், மாயாண்டி, ஆகியோர் செய்திருந்தனர்
இந்த போட்டியின் சிறந்த வீரர்களை தேர்வு செய்வதற்காக தேர்வுக்குழு உறுப்பினர்களாக முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின், ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, ஆக்கி யூனிட் தமிழ்நாடு பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் தமிழக அணிக்கான வீரர்களை தேர்வு செய்தனர்.
