மனநல காப்பகத்தில் காதல்: சிகிச்சைக்கு பிறகு திருமணம் செய்து கொண்ட ஜோடி

சென்னையை சேர்ந்த மகேந்திரனும்(வயது 42), வேலூரை சேர்ந்த தீபாவும்(36) குடும்பத் தகராறு காரணமாக மனதளவில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தந்தை இறந்த சோகத்தில் அளவுக்கு அதிகமான மன அழுத்தம் ஆகிய வெவ்வேறு காரணங்களால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தனர்.
தொடர் சிகிச்சையின் பலனாக மன அழுத்தம் நீங்கி, மன நோயிலிருந்து விடுபட, இருவரும் காப்பகத்தில் உள்ள Care centre-ல் தங்கி மனநல காப்பகத்திலேயே பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
எம்.பில் வரை படித்துள்ள மகேந்திரன் காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கான பயிற்சி மையத்தில் பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார். ஆசிரியர் படிப்பு முடித்த தீபாவும் அதே காப்பகம் சார்பில் நடத்தப்படும் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
ஆரம்பத்தில் தந்தையை இழந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்தபோது முதல் பார்வையிலேயே மகேந்திரன்- தீபா இடையே காதல் ஏற்பட்டது. முதல் சந்திப்பிலேயே மகேந்திரன் ‘திருமணம் செய்து கொள்ளலாமா’ எனக் கேட்க, சற்றே தயங்கிய தீபா சிறிது காலத்திற்குப் பிறகு தன் காதலை ஏற்றுக் கொண்டதாக புன்னகையுடன் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் இருவரது காதலுக்கும் மனநல காப்பகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. இருவரும் முழுமையாக சிகிச்சையில் இருந்து குணமடைந்த பிறகு காதலை ஏற்று இன்று (28ம் தேதி) இருவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது.
இந்த திருமணத்திற்கு இருவீட்டார் சம்மதம் தெரிவித்து உள்ளனர். மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் இன்று திருமணத்தில் முடிந்தது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்து கொடுக்க, கெட்டிமேளம் கொட்ட மகேந்திரன், தீபாவுக்கு தாலி கட்டினார். இந்த திருமணத்திற்கு இருவீட்டார் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
