தம்பதி கொலையில் உருக்கம் :போலீஸ் எச்சரித்தும் பெற்றோரை சமாதானம் செய்ய வந்த புதுப்பெண்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 50). இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியின் மகள் ரேஷ்மா (19), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜ் (28). வெளிநாட்டில் வேலை பார்த்த மாணிக்கராஜ் ஊருக்கு திரும்பி கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.
மேலும் முத்துக்குட்டி, மாணிக்கராஜ்க்கு மாமா முறை என்று கூறப்படுகிறது. மாணிக்கராஜ்- ரேஷ்மா இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு முத்துக்குட்டி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறிய மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா இருவரும் மதுரை திருமங்கலத்திற்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்த பிறகு ஊருக்கு வரமால் இருந்த மாணிக்கராஜ்-ரேஷ்மா இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பி தனியாக வீடு பிடித்து குடித்தனம் நடத்த தொடங்கினார்கள். நேற்று மதியம் மாணிக்கராஜ் – ரேஷ்மா வீட்டில் தனியாக இருந்த போது, முத்துக்குட்டி அங்கு சென்று இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இரட்டை வழக்கில் தலைமறைவாக இருந்த ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி, தாய் மகாலட்சுமி ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே காதல் திருமண ஜோடி கொலையில் உருக்கமான தகவல் கிடைத்து இருக்கிறது. ஊருக்கு வரவேண்டாம் என்று போலீஸ் எச்சரித்தும் புதுப்பெண் ரேஷ்மா , நான் எனது பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்து சேர்ந்து வாழ்வேன் என்ற நம்பிக்கையில் ஊருக்கு திரும்பி இருக்கிறார். அந்த சமயத்தில் தான் கொலை சம்பவம் நடந்து இருக்கிறது,
கொலை செய்யப்பட்ட மாணிக்கராஜ் சரியாக வேலைக்கு செல்லமால் மது அருந்தி வந்தாக கூறப்படுகிறது, மாணிக்கராஜ்,ரேஷ்மாவிற்கு இடையே வயது வித்தியாசம் அதிகம். மேலும் மாணிக்கராஜ் படிக்கவில்லை என்பதால் ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனது மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்து, கடந்த மாதம் 26 ந்தேதி முத்துக்குட்டி சடங்கு நடத்தியுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து 28ந்தேதி ரேஷ்மா வீட்டை விட்டு வெளியேறி மாணிக்கராஜை திருமணம் செய்துள்ளார்.
இதற்கிடையில் தனது மகளை காணவில்லை என்று கூறி எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் தங்களை தேடுவதை தெரிந்து கொண்ட காதல் தம்பதி திருமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி தாங்கள் திருணம் செய்து கொண்டதை தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் எட்டயபுரம் காவல் நிலையம் போலீசார் மூலம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்திருந்த நிலையில் இப்படி திருமணம் செய்து விட்டதாக ரேஷ்மாவின் பெற்றோர் வேதனைபட்டு கூறியது மட்டுமின்றி, எந்த காலத்திலும் தனது மகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
ரேஷ்மாவின் பெற்றோரின் கோபம் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தெரிய வர போலீசார் மாணிக்கராஜ் – ரேஷ்மா தம்பதியை தொடர்பு கொண்டு தற்போது ஊருக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். இந்த சூழ்நிலையில் மாணிக்கராஜுக்கு அங்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஊருக்கு திரும்பி செல்வோம், நான் என்னுடைய பெற்றோர்களிடம் பேசி சமதானம் செய்து விடுவேன் என்று ரேஷ்மா தெரிவித்துள்ளார்.
இதையெடுத்து தான் அந்த தம்பதி ஊருக்கு திரும்பியுள்ளனர். சில உறவினர்கள் மூலமாக ரேஷ்மா தனது பெற்றோருடன் பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் விவசாயம் மற்றும் 100நாள் வேலைக்கு சென்று விட மாணிக்கராஜ் – ரேஷ்மா இருவரும் தனியாக இருந்த போது தான் முத்துக்குட்டி அரிவாளல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாகவும், அதற்கு முன்பாகவே அவரது மனைவியை ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
