அச்சிட்ட காகிதங்களில் வடை, பஜ்ஜி: தூத்துக்குடியில் 6 கடைகளுக்கு தலா ரூ.1௦௦௦ அபராதம்

அச்சிட்ட காகிதங்களில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை வழங்கக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் 65 டீக்கடைகள் ஆய்வு செய்ததில், 14 கடைகளில் நியூஸ் பேப்பர்களில் வடை மற்றும் இதர உணவுப் பொருட்கள் நேரடியாக வழங்குவது கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து நியமன அலுவலரிடத்தில் அபராதம் விதிக்க உணவு பாதுகாப்பு அலுவலர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திங்கள் (25.7.2022) இரவு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், தூத்துக்குடி ஜி.எச், பாளை ரோடு மற்றும் பழைய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள 17 கடைகளை ஆய்வு செய்ததில், 6 கடைகள் விதி மீறியது கண்டறியப்பட்டது.
இக்கடைகளுக்கு தலா ரூ.1,௦௦௦ அபராதம் விதித்து நியமன அலுவலர் உத்திரவிடுவார். அதன் பின்னர், வணிகர்கள் அரசு இணையத்தளத்தில் அபராதத் தொகையை செலுத்தி, சலான் நகலை நியமன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுமக்கள் அச்சிட்ட பேப்பர்களில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை பார்சல் செய்வது குறித்தோ அல்லது உணவினை அச்சிட்ட பேப்பர்களில் சாப்பிட வழங்குவதோ குறித்தோ புகார் அளிக்க விரும்பினால், 9444042322 என்ற வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கு அனுப்பலாம். புகாரைப் பெற்றுக்கொண்ட அடுத்த 48 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்கப்படும். மேலும், புகார் அளிப்பவரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
