பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற நர்சு; டாக்டர் மீது வழக்குபதிவு
கோவில்பட்டியை சேர்ந்தவர் பழைய பஸ் நிலையம் அருகே ஆஸ்பத்திரி நடத்தி வருபவர் டாக்டர் முரளி (வயது 58). இவருடைய ஆஸ்பத்திரியில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 25 வயது பெண் சில நாட்களுக்கு முன்பு நர்சு வேலைக்கு சேர்ந்தார்.
சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் நோயாளிகளை பார்க்க சென்ற ஒவ்வொரு வார்டாக சென்ற டாக்டர் முரளியுடன் அந்த நர்சும் சென்றார். அப்போது அந்த நர்சுக்கு டாக்டர் முரளி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது
இதனால் மனமுடைந்த அந்த நர்சு வீட்டிற்கு சென்றதும் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி கிடந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த நர்சு புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். பின்னர் டாக்டர் முரளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக மேல்விசாரணை நடந்து வருகிறது.