மாணவியை கத்தியால் குத்தியவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை
திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளியில் இறுதித் தேர்வு எழுதி முடித்துவிட்டு மாலை வீடு திரும்பினார்.
திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே மாணவி வந்தபோது, அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், வாக்குவாதம் செய்திருக்கிறார். வாக்குவாதம் முற்றியபோது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்திவிட்டு அந்த வாலிபர் ஓடிவிட்டார்..
இதில் கழுத்து, தோள்பட்டை, முதுகு என 10 இடங்களில் மாணவிக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் அலறியபடி மயங்கி விழுந்த அந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அழிக்கபப்ட்டு வருகிறது.
சம்பவம்குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பொத்தமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் (வயது 22) எபவர் அழைத்துச் சென்றிருக்கிறார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்ததால் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கேசவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த கேசவன், தொடர்ச்சியாக அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியிருக்கிறார். மேலும், `உன்னால்தான் ஜெயிலுக்கு சென்று வந்திருக்கிறேன். நீயே என்னை வேண்டாம் என்று எப்படி சொல்லலாம்’ என தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தான், நேற்று மதியம் மாணவியை பின்தொடர்ந்து வந்து கத்தியால் சரமாரி குத்தியது தெரிய வந்துள்ளது. தலைமறைவான கேசவனை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கீழே பூசாரிப்பட்டி ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு பிணமாக கிடந்தது பள்ளிமாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற கேசவன் என்பது தெரியவந்தது.
காதலை ஏற்க மறுத்ததால் பள்ளி மாணவியை கத்தியால் குத்திவிட்டு கேசவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கேசவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.