அருப்புக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியை அடுத்த வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் இன்று பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பு பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த அனைவரும் சிக்கிகொண்டனர்.மற்ற அறைகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வெடி விபத்தில் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேதிப்பொருள் கலவையில் உராய்வு ஏற்பட்டதால் வெடிவிபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

