• June 13, 2025

அகமதாபாத்தில் 242 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது; மீட்பு பணிகள் தீவிரம்  

 அகமதாபாத்தில் 242 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது; மீட்பு பணிகள் தீவிரம்  

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது

அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

90 பணியாளர்களைக் கொண்ட மூன்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் காந்திநகரில் இருந்து விமான விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளன. மொத்தம் மூன்று குழுக்கள் வதோதராவில் இருந்து அகமதாபாத்திற்கு அனுப்பி வைக்கப்பப்பட்டுள்ளன.

விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை அகமதாபாத் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு, தரையிறக்கம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அகமதாபாத் வந்து கொண்டிருந்த விமானங்கள் அருகாமையில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் இருந்து அகமதாபாத் செல்ல இருந்த மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

விமான போக்குவரத்து துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரித்தார். அப்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருப்பதாக பிரதமரிடம் நாயுடு தெரிவித்தார்.

தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யுமாறும், நிலைமை குறித்து தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். தொடர்புடைய அனைத்து துறைகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றி வருவதாகவும், ஒருங்கிணைந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என்றும் விமான போக்குவரத்து துறை மந்திரியின் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

விபத்து பற்றி ஏர் இந்தியா வெளியிட்ட செய்தியில், அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டினர் என்றும்  தெரிவித்துள்ளது.

குஜராத் விமான விபத்தின் எதிரொலியாக ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தின் முகப்பு படத்தை கருப்பு நிறமாக மாற்றியுள்ளது.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்தது. மதிய நேரம் என்பதால் பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானோர் உணவு அருந்த விடுதிக்கு வந்ததாக தெரிகிறது. விமான விபத்து காரணமாக, விடுதி கட்டிடம் முற்றிலுமாக எரிந்துள்ளது. இதனால் 60க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் கதி என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. பலர் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *