எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு; நீதிபதி படுகாயம்

தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி பூர்ண ஜெயந்த். இவர் உள்பட 6 பேர் திருசெந்தூர் கோவிலுக்கு வந்து இருந்தனர். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு இன்று காலை அவர்கள் ஊருக்கு திரும்பினர்.

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே மேலகரந்தை என்ற இடத்தில் கார் சென்றபோது முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு ஜிப்சம் ஏற்றிக்கொண்டு சென்றது.

லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி இந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் சிக்கி காரில் இருந்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். நீதிபதி பூர்ண ஜெயந்த் உள்பட 3 பேர் மீட்கப்பட்டுஅருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியில் ஒருவர் இறந்து போனார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆனது. நீதிபதி உள்பட 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்த இடத்தில் ஒரு பகுதி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே மீட்பு குழுவினர் சென்று விபத்தில் சிக்கிய கார் மற்றும் லாரியை அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

