விமான விபத்தில் டாக்டர் தம்பதி, குடும்பத்துடன் உயிரிழப்பு ; உருக்கமான தகவல்கள்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே இறங்கத் தொடங்கி அகமதாபாத்தின் மேகனி நகர் அருகே ஒரு தீப்பந்தமாக வெடித்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள். விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் 241 பேர் பலியானார்கள்.

மேலே நீங்கள் பார்க்கும் புன்னகை செல்பி , ஒரு பேரழிவு தரும் சோகம் ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும். அந்த படத்தில் இருப்பது டாக்டர் தம்பதியர் மற்றும் அவர்களின் 3 பிள்ளைகள். அனைவரும் தங்கள் உற்சாகத்தை ஒளிரும் முகங்களுடன் பிரதிபலிக்கிறார்கள்..
டாக்டர் பிரதிக் ஜோஷி 6 வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார். அவரது மனைவி மற்றும் 5 வயது இரட்டை சிறுவர்கள் நகுல், பிரத்யுத் மற்றும் 8 வயது மகள் மிராயா ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வசித்து வந்தனர்.

லண்டனில் தனியாக வசித்த டாக்டர் பிரதிக் ஜோஷி, தனது குடும்பத்தை எப்படியாவது லணடன் அழைத்து வரவேண்டும் என்ற கனவுடன் கடுமையாக உழைத்தார். அங்கு ஒரு தொழிலை தொடங்கியதுடன், அங்கேயே குடும்பத்துடன் வசிக்க தேவையான எதிர்கால நடவடிக்கையை மேற்கொண்டார். இதை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்தவுடன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் குடியேற நாள் பார்த்தார்.

இதை தொடர்ந்து உதய்பூரில் உள்ள பசிபிக் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றிய அவரது மனைவி டாக்டர் கோமி வியாஸ், தனது வேலையை ராஜினாமா செய்தார், குடும்பத்தை நிரந்தரமாக இடமாற்றம் செய்து கணவருடன் மீண்டும் இணைந்து வாழ தயாராக இருந்தார். அவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் தங்கள் புதிய வாழ்க்கைக்காக உற்சாகமாக இருந்தனர்.
டாக்டர் பிரதிக் ஜோஷி, அவரது மனைவி டாக்டர் கோமி வியாஸ் மற்றும் அவர்களது 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோர் லண்டனில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கத் தயாராக இருந்தனர். இதற்காக அகமதாபாத்தில் இருந்து லண்டன் விமானத்தில் பயணத்தை தொடங்கிய சில நிமிடங்களில் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

.துரதிர்ஷ்டவசமாக விமானத்தில் எடுக்கப்பட்ட டாக்டர் தம்பதியின் செல்பி குடும்ப படத்தை உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்து இருக்கிறார்கள். அதே சமயம் குடும்பத்தின் இறுதி புகைப்படமாக அது மாறிவிட்டது என்பது தான் சோகத்திலும் சோகம்.
டாக்டர் தம்பதியை போன்று இன்னும் பலருக்கும், இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருந்திருக்க வேண்டும். மாறாக, அது அவர்களின் துயரமான முடிவாக மாறிவிட்டது.
