குலசாமி என்று கூறிக் கொண்டே.. என் நெஞ்சுக் குலையில் குத்துகிறார்கள்; நீயா? நானா? பார்த்திடுவோம் – டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில், வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
மேலும் மாவட்ட வாரியாக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அன்புமணி அறிவித்து உள்ளார்.

இந்நிலையில் , தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கும் செயல் தலைவருக்கும் இடையே இருக்கும் பிரச்சினை உங்களுக்கு தெரியாது. ஆளுமைகளின் சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது, நான் இங்கே இருந்து கொண்டு கட்சியை வளர்ப்பது, அன்புமணி வெளியே சென்று கட்சியினரை பார்ப்பது என தீர்ப்பு சொன்னார்கள். என்னை நம்ப முடியாது என்று அன்புமணி சொல்லி விட்டார்
ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருந்தால் நானே அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன். அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும்

அன்புமணியை கட்சியை விட்டு வெளியேற்ற நான் என்ன முட்டாளா?.. தந்தைக்கு பிறகே தனயன், அய்யாவுக்கு பிறகே அன்புமணி என்பதே எல்லோரும் சொல்லும் வார்த்தை. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்; ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே நீதி, நேர்மை, தர்மம்.
என் கைகளைக்கொண்டே என் கண்ணை நான் குத்திக்கொண்டேன். என்னையே குறிவைத்து இலக்காக்கி தாக்குகின்றனர்

எல்லாம் அய்யாதான் என்று சொல்லிக்கொண்டே அதல பாதாளத்தில் தள்ள பார்க்கிறார்கள். குலசாமி என்று கூறிக் கொண்டே.. என் நெஞ்சு குலையில் குத்துகிறார்கள்
தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லியும் அதனை அன்புமணி நம்பவில்லை. அய்யாவை நம்ப முடியாது. எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள் என்றார். எனக்குள் இருந்த கோவம் பொங்கி எழுந்தது. நீயா? நானா? பார்த்திடுவோம் என முடிவெடுத்துவிட்டேன்.
பா.ம.க நிறுவனரான நான் வீட்டின் கேட்டை சாத்தி விட்டு இருக்க முடியாது. இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் தலைமை ஏற்க உரிமை இல்லையா? என்று கேட்பது எனக்கு அவமானமாக இருக்கிறது

என்னை குல தெய்வம் என்று சொல்கிறார்கள், எனது தொண்டர்களை நான் வழிகாட்டியாக பார்க்கிறேன். 7 ஆண்டுகளுக்கு முன்னே கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அன்புமணி கூறினார். அவருக்கு அப்போதே அந்த எண்ணம் இருந்திருக்கிறது
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
