• June 13, 2025

2026 தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடவும் தயங்காது; பிரேமலதா பரபரப்பு பேட்டி

 2026 தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடவும் தயங்காது; பிரேமலதா பரபரப்பு பேட்டி

சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.. மாவட்ட, செயலாளர்கள், மண்டல  பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவர்களுடன் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பிறகு பிரேமலதா  செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் கூறியதாவது:-

2026 தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடவும் தயங்காது. தேமுதிக தனித்து போட்டியா என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. கூட்டணி அமைத்து போட்டியா அல்லது தனித்து போட்டியா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

அதிமுகவுடன் சுமுக உறவு உள்ளதா என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. தங்கள் கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது என அதிமுக கூறுவது அவர்களின் நிலைப்பாடு. 

விஜய பிரபாகரனுடன் சேர்ந்து விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். 6 மாதங்களுக்கு கட்சி வளர்ச்சி பணியில்தான் தேமுதிக கவனம் செலுத்தும். 

அதிகார குவிப்புக்கு பதில், கூட்டணி ஆட்சி மூலம் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டால் அதனை தேமுதிக வரவேற்கும். அதிமுகவுடன் தேமுதிக போட்ட ராஜ்யசபா சீட்டு ஒப்பந்த கடிதத்தை நாகரீகம் கருதி நாங்கள் வெளியிடவில்லை.

திமுக கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகைக்கு நன்றி. தவெக தலைவர் விஜய் நடிகர் ஆவதற்கு முன்பு எங்கள் வீட்டுப் பையன். விஜய்யின் தந்தை இயக்கத்தில் பல படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். எப்பொழுதுமே விஜய் எங்கள் வீட்டு பையன். 

நாங்க கட்சி ஆரம்பித்து 20 வருடம் ஆகிவிட்டது. எனவே இப்பொழுது கட்சி ஆரம்பித்த விஜய்யிடம் தான் நீங்கள் தேமுதிக உடன் கூட்டணியா என்ற கேள்வியை கேட்க  வேண்டும்”

இவ்வாறு பிரேமலதா கூறினார்.’

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *